குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது.
மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனச் சொல்லலாம். பொதுவாக, ஓரிரு நாளில் இது சரியாகிவிடும். இது அதிகமானால் உடலில் சரியான அளவு நீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய நீர்வறட்சி உயிருக்கே ஆபத்தாக முடியும்.
வயிற்றுப் போக்குடன், அதன் காரணியைப் பொறுத்து, வயிற்றில் வலி, அசௌகரியம், உப்புசம், குமட்டல் உடனடியாக மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, ஜுரமோ அல்லது இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கோ நேரிடலாம்.
குழந்தைகளின் வயிற்றுப்போக்கு
நீர் வறட்சி (Dehydration)
வயிற்றுப் போக்கின்போது மலத்துடன், நீர் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன. உடனே சரி செய்யாவிட்டால் இது ஆபத்தில் முடியலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்
உலர்ந்த நாக்கு, உதடு மற்றும் சருமம், குழி விழுந்த கண்கள், கன்னம், காரணமின்றி அழுவது, அதிக ஜுரம், 3 மணி நேரங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காதது, அழும்பொழுது கண்ணீர் வராதது.
வறட்சியை எவ்வாறு தடுப்பது?
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக இழந்த நீர் மற்றும் தாதுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் மட்டும் போதாது. அதனுடன் தாதுப் பொருட்களும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வழி தண்ணீருடன், உப்பு மற்றும் சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்ளலாம். (ஒரு லிட்டர் சுத்தமான நீர் அல்லது காய்ச்சி ஆறிய நீர் + 1 டீஸ்பூன் உப்பு + 8 டீஸ்பூன் சர்க்கரை)
கீழ்க்கண்டவை அனைத்தும் மலம் கழிப்பதில் மாற்றம் ஏற்படுத்தும்.
குடல் எரிவு வியாதிகள் (Inflammatory bowel disease)
இந்த வியாதி குடல் எங்கிலும் எரிச்சலால் புண் ஏற்படுத்தும். பொதுவாக இது 15 – 30 வயதுகளில் ஆரம்பமாகும். வயிற்று வலி மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும். இது தவிர தோலில் புண், மூட்டுவலி, எடை குறைவு, அசதி, இரத்த சோகை போன்றவை ஏற்படும். பதற்றம், மன அழுத்தம் ஆகியவை இந்த அறிகுறிகளை அதிகப்படுத்தும்.
குடல் புற்றுநோய்
மலம் கழித்தலில் மாற்றம், வயிற்றில் அசௌகரியம், ரத்தம் கலந்த மலம் போன்றவை குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக இந்நோய் ஏற்படும். குடலில் எரிவு நோய்கள், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல், ஏற்கனவே குடும்பத்தாருக்கு குடல் புற்றுநோய் இருப்பது போன்றவை இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.
இரிடபிள் பௌவல் சின்றோம் (Irritable bowel syndrome)
குடலின் செயல்பாடுகளை தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. சிலவகையான உணவு மற்றும் மனஅழுத்தத்திற்கு சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவு உண்டாக்கும். அதன் காரணமாக, வயிற்றில் வலி, மலம் கழித்த பிறகு வயிற்றுவலி குறைதல், உப்புசம், மலத்தில் சளி ஆகியவை ஏற்படும். நோய்க்கான காரணிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதிக உணவு, சாக்லேட், பால், காபி, டீ போன்ற உணவு வகைகள், சிலவகை மருந்துகள், உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் இவை அனைத்தும் இந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும்.
ஆதாரம் : டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...