மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!). இது பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான (சிறப்பு மனநல மருத்துவர்களைத் தவிர்த்து) மருத்துவர்களுக்கும் பொருந்தும். மருத்துவப் படிப்பில் மனநோய் பயிற்ச்சி மிகக் குறைவே. தமிழ் இலக்கியங்களிலும் புனை கதைகளிலும் கூட மனக்கோளாறுகள் உள்ள கதை மாந்தர்களைக் காண முடியாது! தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல் பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மனதில் ஏற்படும் பிறழ்வுகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பதில் பல சங்கடங்கள் உள்ளன. எல்லா மனப் பிறழ்வுகளும் மனநோய்கள் அல்ல. நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன
(மறதிநோயைத் தவிர்த்து) மூளையில் ஏற்பட்டும் பாதிப்புகள் ஐயத்துக்கிடமின்றி எடுத்துக்காட்டப்பட வில்லை! சில 'மனநோய்'களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மன"நோய்') மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.
மனநோய் என்று அழைப்பதைவிட 'மனக்கோளாறுகள்', மனப்பிறழ்வுகள்', 'மனச் சீர்குலைவுகள்' என்ற பதங்கள் பொருத்தம்மானவை என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து. இதனால்தான், உலகளவில் DSM 5 வட அமெரிக்காவிலும், ICD 10 [4] என ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படும் நோய் வகைபாடு முறைமைகளில் mental disorders என்ற சொற் பிரயோகம் பாவனயில் உள்ளது. மேலும், மன நோய் என்ற பதம் தப்பாக புரிந்துகொள்ளப் படுகிறது. இதனால், இங்கே மனக்கோளாறு என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது. தமிழ் புலமை பெற்றவர்கள் இதை விட பொருத்தமான ஒரு பதத்தை முன்மொழிவார்களானால் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.
இனி, மனக்கோளாறுகளைக் கவனிப்போம். மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.
மனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.
மேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:
மனக்கோளாறுகள் பற்றிய இன்னுமொரு குழப்பமும் உண்டு. மனக்கோளாறுகள் இயல்பான உணர்வு, சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் மிகையால் (அல்லது குறைபாட்டால்) ஏற்படுகிறதா , அல்லது இவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட வெளிப்பாடுகளா? எடுத்துக்காட்டாக, மனச்சோர்வில் காணப்படும் கவலையும் மனச்சோர்வும் சாதாரண சோகத்திலிருந்து வேறுபட்டதா, அல்லது மிகைப்படுத்தப்பட்ட அதே உணர்வா? தற்போது, மனக்கோளாறுகள் யாவும் பின் சொல்லப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவை என்றே நம்பப்படுகிறது. இது பலருக்கு வியப்பாக இருக்கலாம். உண்டு இல்லை என்று இருமையில், பண்புகளின் அடிப்படையில் (qualitative) வகைப்படுத்தாமல், இவை அளவுமுறையிலான வேற்றுமைகளே (quantitative) என்ற அணுகுமுறையே ஏற்றது என்பது மனநல அறிஞர்கள் கருத்து. மதுபாவனையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், மதுப்பழக்கத்தை ஒரே பரிமாணத்தில் உள்ள வெவ்வேறு நிலைகளாக இவ்வாறு வகைப்படுத்தலாம்: அவ்வப்போது குடிப்பது (social drinking), அளவு மீறிக் குடிப்பது (hazardous use), உடலுக்குத்தீங்கு விழைவிக்கும் மதுப்பழக்கம் (harmful use) , மது சார்பு நிலை (alcohol dependance). குருதி அமுக்கம் 140/90 மிமீ ஐ மீறும்போது உயர் குருதி அமுக்கம் (high blood pressure; hypertension) என்று அழைக்கப்படுவது போல, கவலையும் சோகமும் ஓர் எல்லையை மீறும்போது மனச்சோர்வு என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
உடல் நோய்களுடன் ஒப்பிடும்போது மனக்கோளாறுகள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன என்பதும், அவை நம் நாட்டில் மிகக் குறைவு என்ற ஓர் எண்ணமும் நம்மிடையே உண்டு. தவறு! வட அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஓரு பிரபலமான ஆய்வின்படி 26.2 விழுக்காடு அளவு மக்களிடையே ஏதாவது ஒரு மனக்கோளாறு காணப்படுகிறது என்று கணிக்கிடப்பட்டது. இந்தியாவிலும் இம்மாதிரியான பல ஆய்வுகள் நடத்தப்பட்டுளன. இவை நமக்கு தரும் தகவல்களின் படி இந்தியாவில் 20 விழுக்காடு அளவு மக்களிடையே ஏதாவது ஒரு மனக்கோளாறு கண்டறியப்படுகிறது.
உண்மையில் இந்த விகிதாசாரம் கூட குறைவான ஒரு மதிப்பீடே என்பது இந்த ஆய்வாளர்களின் கணிப்பு. ஒப்பீட்டுக்காக, தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் (இரண்டாம் வகை) இதைவிட குறைவாகவே, 10.4 விழுக்காடு அளவிளேயே, காணப்படுகிறது
எல்லா நாடுகளிலும் மனக்கோளாறுகள் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
மனக்கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் துல்லிதமாக அறிந்துகொள்ள முடியாத போதிலும், பல உயிரியல், உளவியல், சமூகவியல் காரணிகளின் ஒன்று கூடலால் மனக்கோளாறு ஏற்படுகிறது என்பதுதான் தற்போதுள்ள கருத்து. உயிரியல் காரணிகளில் மரபணுக்களுக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால், இதுவரை எந்தவொரு மனக்கோளாறுக்கும் காரணமான மரபணுகள் அடையாளம் காணப்படவில்லை. சில மனக்கோறுருகளில் (எ-டு, மனச்சிதைவு) பெற்றோரில் ஒருவருக்கு மனக்கோளாறு இருந்தால் அவரின் குழந்தைகளுக்கு அது ஏற்படும் வாய்ப்பு சராசரியாக 10 -15 விழுக்காடு என்று மட்டும் அறியப்படுகிறது. மேலே கூறியபடி, அதே மரபணுக்கள் வெவ்வேறு மனக்கோளாறுகளுக்கு இட்டுச் செல்லலாம். மன அழுத்தங்கள், இழப்புகள், குழந்தைப் பிராய அனுபவங்கள், உறவுகளில் ஏற்படும் நெருக்கடிகள், குடும்ப பிணக்குகள் ஆகியவை மனக்கோளாறுகள் ஏற்பட உந்து சக்திகளாக அமையலாம். சமூகக் காரணிகளில் வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வேலைப் பழு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனக்கோளாறுகளைக் கண்டறியும் மிகப் பழமையான முறைகளான நோயின் சரிதம் (history), உள நிலை பரிசோதனை (mental state examination) ஆகியவற்றேயே நம்ப வேண்டி உள்ளது. புதிய, தொழில்நுட்ப உபகரணங்களாகிய சி.டி ஸ்கேன் (CT scan ), எம். ஆர். ஐ. ஸ்கேன் (MRI scan) போன்ற சோதனைகள் உதவுவது இல்லை. எனவே, உடல் நோய்களைக் கண்டறியவும் உறுதிப்படுத்தவும் மிகப்பெரும் உதவியான குருதிச் சோதனைகளும், உடலின் அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் உள்ள சீர்கேடுகளையும் அடையாளம் காண துணை செய்யும் மேல் கூறிய ஸ்கேன்களும் மனக் கோளாறுகளைக் கண்டறிவதில் உதவ மாட்டா. ஒரு வகையில் பார்க்கும்போது மனநோய் மருத்துவத்தில் 'கண்டறியும் கலை' (diagnosis) இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னொரு கோணத்திலிருந்து நோக்கினால் மனக்கோளாறுகளைக் கண்டறிய உரிய பயிற்சி, அனுபவம், கூரிய அறிவும் திறமையும் தேவை.
மேலே கூறிய முப்பரிமாண - உயிரியல், உளவியல், சமூகவியல் - அணுகுமுறையே (bio-psycho-social approach) சிகிச்சையிலும் பின்பற்றப் படுகிறது.
மனச்சோர்வு நீக்கி மருந்துகள் (antidepressants), உளப் பிறழ்வு எதிர்ப்பு மருந்துகள் (antipsychotics) , பதற்றம் நீக்கி மருந்துகள் (antianxiolytics) மிந்தூண்டல் சிகிச்சை (ECT, electroconvulsive therapy) ஆகியவை மனக்கோளாறின் குறிகுணங்களை கணிசமான அளவு குறைக்கும் என்பதற்கு ஆராய்ச்சி பூர்வமான ஆதாரங்கள் உண்டு
உளவியல் சார்ந்த சிகிச்சைகளில், ஆராய்ச்சி சான்றுசார் சிகிச்சை வழிமுறைகளில் முன் நிலையில் இருப்பது அறிவினை நடத்தை சிகிச்சையே (CBT, cognitve behaviour therapy). இதில் மனக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்களிடம் காணப்படும் வழக்கமான சிந்தனைகளை மாற்றினால் உணர்வுகளும் மாற்றமடையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையாகக் கொண்டு மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனக்கோளாறுகளில் பயன்படுத்தப்படுகிறது. உளப்பகுத்தாய்வு (psychoanalysis) என்ற ஃராய்டிச கருத்துகள் தற்போது வலுவிழந்த சிகிச்சை முறைகளாகக் கருதப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு மிகச் சொற்பமே என்பது ஆராய்ச்சிகள் தரும் தகவல். மனவசியம் (hypnotism) இப்போது மனக்கோளாறுகளில் பயன்படுத்தப் படுவதில்லை
சமூகவழி சிகிச்சைகளில் (சிலர் இதை உளம் சார்ந்தது என்றும் கூறலாம்) மனக்கோளாறுகளை பராமரிப்பதில் குடும்பத்தின் பங்கை வலியுறித்தி குடும்பத்தினருக்கு மனக்கோளாறின் தன்மையையும் பண்புகளையுமம் கற்றுக் கொடுத்தல், மனக்கோளாறு மீள ஏற்படுவதைத் தடுப்பது, குணமாவதற்கு இசைவான சூழலை ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
ஆதாரம் : டாக்டர். எம்.எஸ். தம்பிராஜா (கட்டுரை கீற்று)
கடைசியாக மாற்றப்பட்டது : 6/13/2020
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...